தமிழகத்தில் 1,000 இடங்களில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்: மரக்கன்று கொடுத்து வரவேற்றனர்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்: மரக்கன்று கொடுத்து வரவேற்றனர்
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்றன. முகாமில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு கட்சி நிர்வாகிகள் மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை வலிமையாக எதிர்கொள்ளும் வகையில், கட்சியின் உட்கட்டமைப்பை விரிவாக்கும் நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையோடு, மகளிர் மற்றும் மாணவர் பாசறை இணைந்து தமிழகம் முழுவதும் டிச.29-ம் தேதி ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்படும் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை, மகளிர் பாசறை மற்றும் மாணவர் பாசறை சார்பில் ஒரே நாளில் 1000 உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னையில் மதுரவாயல், எழும்பூர், ஆர்.கே.நகர், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், சேப்பாக்கம், மந்தைவெளி என மொத்தம் 206 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 25 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெற்றது.

தொகுதி வாரியாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம்களில் புதிதாக சேரும் உறுப்பினர்களுக்கு கட்சியினர் மரக்கன்றுகள் வழங்கி வரவேற்றனர். இதேபோல் கோவையில் 110 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டன. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுயில் 21 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 1,000 இடங்களில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மூலம் சேர்ந்த புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என கட்சி தலைமையகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in