மேட்டூர் அருகே உ.பி சுற்றுலா பயணிகள் - போலீஸ் மோதல் சம்பவம்: 3 காவலர்கள் சஸ்பென்ட்

மேட்டூர் அருகே உ.பி சுற்றுலா பயணிகள் - போலீஸ் மோதல் சம்பவம்: 3 காவலர்கள் சஸ்பென்ட்
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அருகே உத்தர பிரதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் போலீஸ் இடையை ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 3 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 போலீஸாரையும் சஸ்பென்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்யராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த 43 பேர் சொகுசு பேருந்தில் 35 நாட்கள் ஆன்மிக சுற்றுலா வந்தனர். தமிழகத்தில் காஞ்சி, ஸ்ரீரங்கம், ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களை பார்வையிட்டனர். பின்னர், கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு தமிழக எல்லையான மேட்டூர் காரைக்காடு சோதனைச் சாவடி வழியாக கடந்த வெள்ளிக்கிழமை (27-ம் தேதி) சென்றனர். அப்போது காரைக்காடு மதுவிலக்கு சோதனைச் சாவடியில் போலீஸார் சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

பணி மாற்றும் நேரம் என்பதால் போலீஸார் அனைவரும் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். அப்போது, வாகனத்தின் ஆவணங்களை போலீஸார் கேட்டுள்ளனர். மேலும், பேருந்தின் ஓட்டுநரிடம் சோதனைச் சாவடியை கடந்து செல்ல பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, உத்தரப் பிரதேச சுற்றுலாப் பயணிகள் மற்றும் சோதனைச் சாவடி போலீஸார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சுற்றுலா பயணிகள் இரும்பு ராடு கொண்டு தாக்கினர்.

அதேபோல், போலீஸார் சுகனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசு மற்றும் பொதுமக்கள் உத்தர பிரதேச சுற்றுலாப் பயணிகளை லப்பர் பைப், கட்டைகள் கொண்டு தாக்கினர். மேலும், போலீஸார் உ.பி சுற்றுலாப் பயணிகளை சோதனை சாவடியில் காலால் எட்டி உதைத்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கொளத்தூர் போலீஸார் உ.பி சுற்றுலா பயணிகள் மற்றும் போலீஸாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, கொளத்தூர் போலீஸார் உ.பி சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த பேருந்து ஓட்டுநர் சிவ நாராயணன் (52), அஜய் (20) மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜாமினில் விடுவித்தனர். அதேபோல், பணியில் இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து சுகனேஸ்வரன், செந்தில்குமார், முத்தரசு ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்ட சம்பவம் போலீஸார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in