

மாமல்லபுரம்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் ‘இந்திய நாட்டிய விழா’ ஜன.1ம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாத்தில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில், இந்திய நாட்டிய விழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரையில் என நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. இதில், உள்ளூர் மற்றும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த நடன கலைஞர்கள் தங்களின் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.
மேலும், வரும் ஜன.20-ம் தேதி வரையில் நாட்டிய நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, மத்திய அரசு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், சர்வதேச சுற்றுலா தலமான கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்த இந்திய நாட்டிய விழா இன்று (27-ம் தேதி) முதல் வரும் ஜன.1-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக சுற்றுலாத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜன.2-ம் தேதி மாலை வழக்கம்போல் நாட்டிய விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.