

உதகை: உதகையில் 45 நாடுகளை சேர்ந்த இயக்குநர்களின் 120 குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன.
உதகையில் நீலகிரி பிலிம் கிளப் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் ஆண்டு தோறும் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குறுப்படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இவ்விழா, உதகையில் உள்ள அசெம்பளி ரூம்ஸ் திரையரங்கில் இன்று (டிச.27) தொடங்கியது.
விழாவை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இம்முறை 45 நாடுகளை சேர்ந்த இயக்குநர்களின் 120 குறும்படங்கள் திரையிடப்படடுள்ளது. வரும் 29-ம் தேதி வரை அசெம்பளி ரூம்சில் குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன.
நீலகிரி பிலிம் கிளப் தலைவர் ரவி செந்தில்குமார் மற்றும் தலைவர் முகமது பரூக் கூறியதாவது: உதகை குறும்பட விழா அசெம்பிளி ரூம்ஸ் திரையரங்கில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முறை இன்று தொடங்கி மூன்று நாட்கள் குறும்பட விழா நடக்கிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 120 குறும்படங்கள் திரையிடப்படவுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருக்கான தங்க யானை மற்றும் பசுமை யானை விருதுகள், இவ்விழாவின் நிறைவு நாளில் வழங்கப்படும். இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தை 4 குறும்படங்களும் திரையிடப்படுகிறது. பட விழாவில் திரையிடப்படும் திரைப்படங்களை பார்வையாளர்கள் இலவசமாக காணலாம், என்றனர்.
தொடக்க விழாவில், பழழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இயக்குநர் உதயகுமார், இருளர் பழங்குடியின தலைவர் சங்கர், அசம்பிளி ரூம்ஸ் திரையரங்கு மேலாளர் ராதாகிருஷ்ணன், நீலகிரி பிலிம் கிளப் இயக்குநர் பரமேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். ஏராளமான மக்கள் இந்த குறும்படங்களை கண்டு ரசித்தனர்.