ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழக்கும்: தமிழகத்தில் எப்போது வரை மழைக்கு வாய்ப்பு?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழக்கும்: தமிழகத்தில் எப்போது வரை மழைக்கு வாய்ப்பு?
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதையொட்டியமத்திய மேற்குவங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திர வட தமிழக கடலோரப் பகுதிகளில் நேற்று நிலவியது.இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் இன்று வலுவிழக்கும். இதற்கிடையே, லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இவற்றின் தாக்கத்தால் வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங் களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வரும் 30-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 82.4-84.2 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 73.4-75.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

வடதமிழக கடலோர பகுதி களில்,மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும்அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், வடதமிழக கடலோர பகுதிகளையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in