

கரூர்: கரூர் மாவட்டத்தில் நேற்றிரவு மற்றும் இன்று (டிச.21-ம் தேதி) அதிகாலை பெய்த கனமழையால் வீரராக்கியத்தில் உள்ள குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
கரூர் மாவட்டத்தில் மாயனூர், கிருஷ்ணராயபுரம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு மற்றும் இன்று (டிச. 21ம் தேதி) அதிகாலை 1 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் வீரரராக்கியம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடை, வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து வீடுகளை சூழ்ந்து நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அவதிப்பட்டனர்.
பாலராஜபுரம் ஊராட்சி மற்றும் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2 பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி வடிகால்கள் மூலம் மழை வெள்ளம் வடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் தெற்கு களம் பகுதியில் ராஜலிங்கம், வைரமூர்த்தி ஆகிய இருவரின் வீடுகள், இரு மாட்டு கொட்டகைகளில் மழை வெள்ளம் புகுந்ததில் இரு ஆடுகள் அடித்து செல்லப்பட்டன.
வீரராக்கியம் பகுதியில் வடிகால் வசதியில்லாததால் கனமழை பெய்தால் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைவெள்ளம் தொடர்ந்து சூழ்ந்து வருவதால் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கரூர் மாவட்டத்தில் இன்று (டிச. 21ம் தேதி) காலை 8 மணி வரை பதிவான மழையளவு மி.மீட்டரில். மாயனூர் 47.40, கிருஷ்ணராயபுரம் 33.30, கரூர் 29.40, பஞ்சப்பட்டி 18.20, குளித்தலை 13.40, மைலம்பட்டி 2 என மொத்தம் 143.70, சராசரியாக 11.98 மி.மீட்டர்.