Published : 20 Dec 2024 05:50 AM
Last Updated : 20 Dec 2024 05:50 AM
சென்னை: சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என மத்திய அரசு பாராட்டி உள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் இணைந்து, 8-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று கொண்டாடியது.
இந்நிகழ்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநர் என்.ஜே.முத்துக்குமார், சித்த மருத்துவ வல்லுநர்கள், சித்த மருத்துவ பேராசிரியர்கள், சித்த மருத்துவர்கள், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சித்த மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 1600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் காணொலிக் காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவ கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், நாட்டின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூலின் 3-வது பாகம் (தமிழ்), எட்டாவது சித்த மருத்துவ தின விழா மலர் ஆகியவற்றை ஆயுஷ்துறைச் செயலர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா வெளியிட்டார்.
தொடர்ந்து, இந்திய அரசின், சிறு ஆராய்ச்சி திட்டத்தில் வெற்றி பெற்ற 10 இளநிலை சித்த மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம், 5 முதுநிலை மாணவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் என ஆராய்ச்சி உதவித்தொகையையும், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா, ‘ சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டில் கிட்டத்தட்ட 900-க்கும் மேற்பட்ட ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இத்துறை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது.
கிராம பகுதிகளில் 90 சதவீத மக்களும், நகர்புறங்களில் 95 சதவீத மக்களும் ஆயுஷ் மருத்துவத்தை பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். இவர்களில் 50 சதவீதம் பேர் ஆயுஷ் மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்களைப் பெற 22 செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.
காணொளி வாயிலாக கலந்து கொண்ட மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் பேசுகையில், ‘‘கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவ முறைகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. தேசிய ஆயுஷ் இயக்கத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT