‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் 2 கோடியாவது பயனாளிக்கு மருத்துவ பெட்டகம் - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளியான சுந்தராம்பாளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளியான சுந்தராம்பாளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.
Updated on
2 min read

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இரண்டு கோடியாவது பயனாளியான ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாளின் இல்லத்துக்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று (டிச.19) ஈரோட்டுக்கு வருகைத் தந்தார். அங்கு, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், இரண்டு கோடியாவது பயனாளியான நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சுந்தராம்பாளின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். தொடர்ந்து, இரண்டு கோடியே ஒன்றாவது பயனாளியான வசந்தா என்பவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு வழங்கப்படும் இயன்முறை சிகிச்சை முறைகளை பார்வையிட்டு, சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கடந்த 5.8.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளி கிராமத்தில் முதல் பயனாளியான சரோஜாம்மாள் என்பவருக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தேவையான மருந்துகள் வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள் (Palliative Care), இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy) மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டையாலிசிஸ் செய்துகொள்வதற்கான (CAPD) பைகள் வழங்குதல் போன்ற ஏழை எளிய மக்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளையும் களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களிலேயே வழங்கப்படுகின்றன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா பணியாளர்கள் போன்றவர்கள் இச்சேவைகளை வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில், ஒரு இயன்முறை பணியாளர் மற்றும் ஒரு நோய் ஆதரவு செவிலியர் அடங்கிய குழு தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் சேவைகளை வழங்கி வருகின்றன.

இத்திட்டத்தின், ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சன்னாசிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் மீனாட்சிக்கு 29.12.2022 அன்று தமிழக முதல்வரால் மருத்துவப் பெட்டகம் வழங்கப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in