உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?
Updated on
1 min read

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இது, அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற்று, மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை நீடிக்கும். குறிப்பாக, இன்று (டிச.17) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (டிச.18) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.19-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in