

சென்னை: வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது. 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்துக்கு அனைத்து வரிகள் உட்பட மும்பையில் ரூ.643, ராஜஸ்தானில் ரூ.833, மத்திய பிரதேசத்தில் ரூ.618, உத்தரப் பிரதேசத்தில் ரூ.693, பிஹாரில் ரூ.689, மராட்டியத்தில் ரூ.668-ம் வசூலிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் ரூ.113 மட்டுமே வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழகத்தில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.
தமிழகத்தில்தான் விவசாயிகளுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் 2 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் யூனிட்வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது.கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. என்றாலும், வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் மற்ற மாநிலங்கள் போல் உயர்த்தப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113ஆகும். இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது மும்பை 100 யூனிட்டுக்கு ரூ.643 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, டாடா நிருவாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரம் ரூ.524, மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.488.
இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழகத்தில்தான் மிகமிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது.
இதன் மூலம் தமிழக முதல்வர் ஏழை, எளியோரின் நல்வாழ்வில் செலுத்திவரும் அக்கறையும் கரிசனமும் வெள்ளிடை மலையாக விளங்குகிறது, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழகத்தில்தான் மிகமிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது.