

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மட்டுமே தென்மேற்கு பருவமழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் போதிய மழையின்றி வறண்ட வானிலை நிலவியது. வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றம் அளித்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 5 மணியளவில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மாலை வரை மழை பெய்து வந்தது. மாலையில் மழை வெளுத்து வாங்கியது. இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.
வெள்ளிக்கிழமை காலையிலும் பெய்து வந்த மழை காலை 10 மணியளவில் நின்றது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் ஆய்க்குடியில் 312 மி.மீ., செங்கோட்டையில் 240 மி.மீ., ராமநதி அணையில் 238 மி.மீ., தென்காசியில் 230 மி.மீ., குண்டாறு அணையில் 208 மி.மீ., சங்கரன்கோவிலில் 146 மி.மீ., கருப்பாநதி அணையில் 144 மி.மீ., சிவகிரியில் 138 மி.மீ., அடவிநயினார் அணையில் 136 மி.மீ., கடனாநதி அணையில் 92 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 188.40 மி.மீ. மழை பதிவானது.பலத்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. 85 அடி உயரம் உள்ள கடனாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்ந்து 71 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 390 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.இதேபோல் 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 16.50 அடி உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணை நீர்மட்டம் 81.50 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் 1200 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
72.10 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 63 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2554 கனஅடி நீர் வந்தது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்து 68 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 244 கனஅடி நீர் வந்தது. 10 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 36.10 அடி உயரம் உள்ள குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளதால் அணைக்கு வரும் 345 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமாநதி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டதால் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை அந்தந்த பகுதியில் உள்ள கோயில்கள், தேவாலயங்ள், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒலிபெருக்கிகள் வாயிலாக ராமநதி ஆற்றுப்படுகை ஓரம் வசித்து வரும் மக்களுக்கு விடுக்கப்பட்டது. கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் இரண்டாவது நாளாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பிரதான அருவி நீரின் ஒரு பகுதி சந்நிதி பஜார் வழியாக சீறிப் பாய்ந்தது. இதனால் இந்த சாலை ஆறுபோல் காணப்பட்டது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.