வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று (டிச.7) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, வரும் டிச.11-ம் தேதி இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகையை ஒட்டியிருக்கக்கூடிய இந்தியப் பெருங்கடல் அதனை ஒட்டியிருக்கக் கூடிய வங்கக் கடலில் வளிமண்டல சுழற்சி இருந்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று அதே பகுதியில் நிலவி வருகிறது. இது, தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது, மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா என்பது குறித்து தற்போது எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த காற்றத்தழுத்த தாழ்வு பகுதி, டிச.11-ம் தேதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக - இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, டிசம்பர் 11-ம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in