

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, மழைக்கு உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவது உட்பட பல்வேறு பாதிப்புகளுக்கான நிவாரணம், இழப்பீட்டுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நவம்பர் 30-ம் தேதி முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயல் காரணமாக வடமாவட்டங்களில் கனமழை பரவலாக கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நேற்று டிச.3-ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் காணொலி வாயிலாக தற்போதைய நிலையை முதல்வர் கேட்டறிந்தார். அதன்பிறகு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் விழுப்புரம். கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிவாரண உதவிகள் வழங்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, புயல், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட முன்னுரிமை அளிக்கப்படும். மழையால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் சேதமுற்றிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.22,500, மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.8,500 வழங்கப்படும். எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.37.500, வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம், கோழி உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.100 வழங்கப்படும்.
விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வரிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில், புயல் நிவாரணம் தொடர்பான தமிழகத்தின் கோரிக்கையை பிரதமர் உடனே பரிசீலிப்பார் என நம்புவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி வாயிலாக என்னை தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பை திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்தேன்.
மேலும், தமிழக மக்களை கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்த புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்ற எனது கடிதத்தை குறிப்பிட்டு இதுகுறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் இந்த கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உறுதிபட நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.