புதுச்சேரி புயல் தாக்கம்: மெக்கானிக் கடைகளில் அலைமோதும் கூட்டம்!

புயல், மழையால் பாதிப்புக்குள்ளான இருசக்கர வாகனங்களை பழுது நீக்க கடைகளில் குவிந்த மக்கள்.
புயல், மழையால் பாதிப்புக்குள்ளான இருசக்கர வாகனங்களை பழுது நீக்க கடைகளில் குவிந்த மக்கள்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் நகரமே கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. தரை தளத்தில் வெள்ளம் புகுந்ததால் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதேபோல சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது. ஆங்காங்கே வாய்க்கால்களில் வாகனங்கள் சரிந்து கிடந்தன. மழை நின்று, வெள்ளம் வடிந்ததால் வாகனங்களை உரிமையாளர்கள் மீட்டனர்.

இதனால் மோட்டார் சைக்கிள்களை சீரமைக்க மெக்கானிக் கடைகளில் பலரும் குவிந்து வருகின்றனர். இதனால் மெக்கானிக் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல் கார்களை சீரமைக்க மெக்கானிகளை பலரும் நாடி வருகின்றனர். கார்களை பழுது நீக்கவும் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு பணிக்கு பலரும் நேற்று சென்றனர். அப்போது வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப பங்குகளில் குவிந்தனர்.

பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் கையிருப்பு குறைவாக இருந்தது. சில பெட்ரோல் பங்குகளும் இயங்கவில்லை. இயங்கிய பெட்ரோல் பங்குகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. பெட்ரோல் வந்து அனைத்து பங்குகளும் இயங்க தொடங்கினால் நெரிசல் குறைந்து விடும் என்று கூறப்படுகிறது.

இதேபோல் பல ஏடிஎம்களில் பணம் இல்லாததால், பலரும் வங்கிகளில் பணம் எடுக்க சென்றனர். ஓய்வூதியம் பெறவும் பலரும் வங்கிக்கு வந்தனர். நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் பல வங்கிகளில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியும் நேற்று அதிவேகமாக தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in