சென்னை குடிநீர் தேவைக்காக ஆரணி ஆற்றின் உபரிநீர் பூண்டிக்கு திருப்பிவிடப்பட்டது: நீர்வளத் துறை தகவல்

சென்னை குடிநீர் தேவைக்காக ஆரணி ஆற்றின் உபரிநீர் பூண்டிக்கு திருப்பிவிடப்பட்டது: நீர்வளத் துறை தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னை குடிநீர் தேவைக்காக ஆரணியாறு வெள்ள உபரிநீர் பூண்டி ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கண்டலேறு - பூண்டி கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள கீழ்குமிழி (Siphon) ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் பெறப்படும் நீரை ஆரணி ஆற்றில் கலக்காமல் பூண்டி ஏரிக்கு அனுப்பும் வகையில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, சிட்ரப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆரணியாற்றில் உள்ள அணைக்கட்டுகளின் கால்வாய்களுக்கும் நிலத்தடி நீரை செறிவூட்டவும் அளிக்கப்பட வேண்டிய விநாடிக்கு 2,376 கன அடி வெள்ளநீருக்கு மிகையான உபரிநீரை கண்டலேறு - பூண்டி கால்வாய்க்கு திருப்பிவிடும் வகையில் வலது கரையில் நீரொழுக்கி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.760 டிஎம்சி-யில் 6.950 டிஎம்சி மட்டுமே நிரம்பியுள்ளது. இந்நிலையில், ஆரணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரிலிருந்து அதன் கீழ் உள்ள அணைக்கட்டுகளின் பாசன வழங்கு கால்வாய்க்கு அளிக்கப்பட வேண்டியது போக மீதமுள்ள உபரிநீரின் ஒரு பகுதியாக விநாடிக்கு 200 கன அடி வரை கண்டலேறு - பூண்டி வழங்கு கால்வாய் வழியாக கொசஸ்தலையாற்றில் அமைந்துள்ள பூண்டி ஏரிக்கு சென்னை குடிநீர் தேவைக்காக தற்போது திருப்பி விடப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in