

கடலூர்: வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம்,பாப்பாக்குடி, இறவாங்குடி பகுதியில் மழை பெய்து வருவதால் அந்த மழை தண்ணீர் பல்வேறு காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று (டிச.1) ஏரியின் நீர்மட்டம் 46.10 அடியாக உள்ளது. ஏரிக்கு செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் வழியாக விநாடிக்கு 1050 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியின் வடிகால் மதகான விஎன்எஸ்எஸ் மதகில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவையில்லாதால் பாசன மதகுகள் அடைக்கப்பட்டுள்ளன.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 9 அடி உள்ள கீழணையில் தற்போது 7.5 அடி தண்ணீர் உள்ளது.
இது குறித்து சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில், “கடலூர் மாவட்டத்திலும், வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வந்தால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து விஎன்எஸ்எஸ் வடிகால் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மழை நின்றவுடன் வெளியேற்றப்படும் தண்ணீரும் நிறுத்தப்படும்'' என்றார்.