

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தென் மாவட்ட திமுகவே மு.க.அழகிரியின் கண்ணசைவில் சுழன்றது. இப்போது அழகிரி ஆக்டீவ் அரசியலில் இல்லாததால் குருநில மன்னர்கள் நிறையப் பேர் கோலோச்சுகிறார்கள். அந்த வகையில், மதுரை திமுகவின் அடுத்த தலைமுறை அதிகார மையங்களாக அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.
பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கம் என்பதாலும் எடுத்த எடுப்பிலேயே திமுக அமைச்சரவையில் நிதியமைச்சர் அந்தஸ்தில் அமரவைக்கப்பட்டார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
கூடவே, திமுக ஐடி விங்க் செயலாளராகவும் அங்கீகரிக்கப்பட்டார். கொடுத்த பொறுப்பில் திறம்படவே செயல்பட்ட பிடிஆர், தமிழக அரசின் நிதி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்காக முதல்வரின் பாராட்டுகளை குவித்தார். விளைவாக, உள்ளாட்சித் தேர்தலில் பிடிஆரால் கைகாட்டப்பட்ட இந்திராணியை மதுரைக்கு மேயராக்கியது தலைமை.
இப்படி கட்சியிலும் ஆட்சியிலும் ஏறுமுகத்தில் பிடிஆர் இருந்த சமயத்தில் 2022-ல் உட்கட்சித் தேர்தல் வந்தது. அப்போது உள்ளூர் அரசியலிலும் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்க நினைத்தார் பிடிஆர். அங்குதான் அவருக்கு சிக்கல் ஆரம்பமானது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை திமுகவினர், “பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அதலை செந்தில் என்பவரை களமிறக்கினார். இவரை எதிர்த்து, தளபதி எம்எல்ஏ-வை அமைச்சர் பி.மூர்த்தி கொம்பு சீவினார். பிடிஆரின் செல்வாக்கை சரிக்க இந்தத் தேர்தலை ஒரு ஆட்டக்களமாக பயன்படுத்த நினைத்த அமைச்சர் பி.மூர்த்தி, தளபதி, மணிமாறன், ஜெயராமன் உள்ளிட்ட மதுரை திமுக முக்கிய நிர்வாகிகள் ஓரணியில் திரண்டனர்.
தங்களது ஆட்களை ஜெயிக்க வைக்க இரு தரப்புமே ஆட்களை எல்லாம் கடத்திவைத்தது. அரசு நிர்வாகத்தில் பிடிஆரின் கட் அண்ட் ரைட் பிடிக்காத மூத்த அமைச்சர்கள் சிலர் மூர்த்தி அண்ட் கோ-வுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். ஆனால், தேர்தல் நடந்தால் வெட்டுக் குத்து வரை போகலாம் எனச் சொல்லப்பட்டதால் இருதரப்பையும் அழைத்து சமாதானம் செய்தது தலைமை.
கடைசியில், தளபதி மாநகர் மாவட்டச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் விரக்தியடைந்த பிடிஆர், தளபதியையும், அமைச்சர் பி.மூர்த்தியையும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மறைமுகமாக தாக்கினார். இதையடுத்து, தலைமை மீண்டும் இருதரப்பையும் அழைத்துப் பேசி அடக்கி வாசிக்க வைத்தது.
இந்த நிலையில் முதல்வர் குடும்பம் தொடர்பாக பிடிஆர் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இதைப் பிடித்துக்கொண்டு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசுக்கு எதிராக பிலுபிலுத்தன. அந்த ஆடியோ தொடர்பாக பிடிஆர் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்த பிறகும் சர்ச்சை ஓயாத நிலையில் திடீரென அவரிடமிருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சராக்கப்பட்டார்.
இப்படி அடுத்தடுத்து தனக்கு அடிகள் விழுந்ததால் மதுரை மாநகராட்சி மற்றும் மாநகர திமுக விவகாரங்களில் தலையிடுவதை பிடிஆர் அறவே நிறுத்திக் கொண்டார். அத்துடன் திமுக ஐடி விங்க் செயலாளர் பதவியையும் துறந்தார். இப்போது அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் மட்டுமே பிடிஆரின் தலையைப் பார்க்க முடிகிறது. அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாமல் அமைதிகாக்கிறார் பிடிஆர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைச்சர் பி.மூர்த்தி, முதல்வர், துணை முதல்வரை மிக நெருங்கிவிட்டார்” என்றனர்.
பிடிஆர் ஆதரவாளர்களோ, “தலைமை இடும் கட்டளைகளை நிறைவேற்றி வரும் பிடிஆர், தனது தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முனைப்பில் இருக்கிறார். தொகுதி மக்களுக்காக, தான் சாதித்தவற்றை புத்தகமாக வெளியிட்டுள்ள அவர், அதை வீடு வீடாகச் சென்று வழங்கி வருகிறார். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் முதலமைச்சர் பாராட்டும் வகையில் தனது செயல்பாடுகளை திட்டமிட்டு வருகிறார்” என்றனர்.
ஆக, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் இருந்தபோது மு.க.அழகிரியை எதிர்த்து மதுரைக்குள் அரசியல் நடத்தினார். இப்போது அவரது பிள்ளை பழனிவேல் தியாகராஜன் அழகிரியின் முன்னாள் சிஷ்யகோடிகளை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்!