

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க 8.38 லட்சம் விண்ணப்பங்கள் உட்பட 14 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (நவ.25) வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வரும் ஜன.1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக்.29-ம் தேதி தொடங்கியது. இதற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் கடந்த நவ 23,24ம் தேதிகளில் அனைத்து சுட்டப்பேரவை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெற்றன.
இந்த சிறப்பு முகாம்களில் , வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைப்பதற்காக படிவங்கள் பெறப்பட்டன. அதன்படி பெயர் சேர்க்க 3,95,981 விண்ணப்பங்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் 4 விண்ணப்பங்கள், ஆதார் இணைப்புக்கு 364, பெயர் நீக்கம் செய்ய 75,573, திருத்தம் மேற்கொள்ள 2,43,180 என மொத்தம் 2 நாட்களில் 7,15,102 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
முன்னதாக கடந்த நவ.16,17 ஆகிய இரு நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்ற நிலையில், 4 நாட்கள் முகாமிலும் சேர்த்து, பெயர் சேர்க்க 8,38,016, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 4, ஆதார் இணைப்புக்கு 783, பெயர் நீக்கம் செய்ய 1,19,701 மற்றும் திருத்தம் மேற்கொள்ள 4,42,111 என 14 லடசத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, என்று அவர் கூறினார்.