அரசுப் பள்ளி ஆசிரியர் படுகொலை: தமிழகம் முழுவதும் டிட்டோஜேக் போராட்டம்

ஜாக்டோஜியோ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் | படம்: மூர்த்தி
ஜாக்டோஜியோ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் | படம்: மூர்த்தி
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் டிட்டோஜேக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மல்லிப்பட்டிணம் அரசுப் பள்ளி வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ரமணி புதன்கிழமை கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆசிரியர் கொலையை கண்டித்தும், பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து போராட்டக்குழுவினர் கூறும்போது, “தற்போதைய சூழலில் எங்கிருந்து தாக்குதல் வருமோ என்ற அச்சத்தில் பணிபுரிய வேண்டிய சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலை மாற மருத்துவர் உள்ளிட்ட அரசு துறையினருக்கு உள்ளதை போல் ஆசிரியர்களுக்கும் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்” என்றனர். இதேபோல், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் (எஸ்எஸ்டிஏ) உள்ளிட்ட சில அமைப்புகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பள்ளிக்கு வருகை தந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in