ராமநாதபுரத்தில் மேகவெடிப்பு: ராமேஸ்வரத்தில் 41 செ.மீ மழை பதிவு

ராமநாதபுரத்தில் மழை | படங்கள்: எல்.பாலசந்தர்.
ராமநாதபுரத்தில் மழை | படங்கள்: எல்.பாலசந்தர்.
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக, அந்த மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமையும் அப்பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகலில் தென் மாவட்டங்களில் அதிகனமழையாக பெய்தது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், ராமநாதபுரம் தாலுகாக்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேஸ்வரத்தில் 41 செமீ, தங்கச்சிமடத்தில் 32 செமீ மண்டபத்தில் 26 செமீ, பாம்பனில் 23 செமீ மழை பதிவாகியுள்ளது. மாலை 5.30 மணி நிலவரப்படி பாம்பனில் 27 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரையிலான 3 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 36 செமீ, தங்கச்சிமடத்தில் 27 செமீ, பாம்பனில் 19 செமீ, மண்டபத்தில் 13 செமீ மழை கொட்டித்தீர்த்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மிக குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக்கூட்டங்கள் காரணமாக அங்கு மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in