

சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருப்பூரை சேர்ந்த அதத்துல்லாவுக்கு மேலும் பல சமூக விரோத சம்பவங்களுடன் தொடர்பிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்தவர் சுரேஷ் குமார்(48). இவர் கடந்த ஜூன் 18-ம் தேதி இரவு அம்பத்தூரில் உள்ள தனது கடை அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அம்பத்தூர் பாடியை சேர்ந்த நசீர் ஜலாலுதீன்(33), கடலூர் பரங்கிப்பேட்டை குத்புதீன்(24) காஜாமொய்தீன்(47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் 17 வயது மாணவன் ஒருவரும் பிடிபட்டார்.
அதைத் தொடர்ந்து பெங்களூரில் பதுங்கி இருந்த நாகர்கோவிலை சேர்ந்த அப்துல் சமீம்(24), கோட்டார் இளங்கடை சையத் அலி நவாஸ்(25), வேலூர் வாணியம்பாடி அப்துல் ஹக்கீம்(44) மற்றும் கொலைக்கு சதி திட்டம் தீட்டிய அபுதாகிர்(37), அடைக்கலம் கொடுத்த பெங்களூரை சேர்ந்த சமியுல்லா மற்றும் சாதிக்பாஷா ஆகிய 6 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸார் துப்பாக்கி முனையில் பெங்களூரில் வைத்து கைது செய்தனர்.
இவர்களை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் புதன்கிழமை காலையில் திருப்பூரை சேர்ந்த அதத்துல்லா(48) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதுவரை சுரேஷ்குமார் கொலை வழக்கில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் அதத்துல்லா. சுரேஷ்குமார் கொலை வழக்கு தொடர்பாக இவரை கடந்த வாரம் அழைத்து விசாரித்துவிட்டு போலீஸார் அனுப்பிவிட்டனர். ஆனாலும் ரகசியமாக அதத்துல்லாவை கண்காணித்து வந்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சுரேஷ்குமார் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பதும், பல கொலை சம்பவங்களில் கொலையாளிகளுக்கு உதவியதும் தெரியவந்தது.
சிமி இயக்கத்தின் கிளை இயக்கமாக அவரது இயக்கத்தை நடத்தி வந்ததாக சந்தேகம் ஏற்பட்டது. மேலும், திருப்பூரில் இந்து இயக்க தலைவர் ஒருவரை தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது. அதத்துல்லாவை போலீஸார் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.