நெல்லை அருகே வீடு புகுந்து சிறுவனை வெட்டிய சம்பவத்தில் மூன்று பேர் கைது

நெல்லை அருகே வீடு புகுந்து சிறுவனை வெட்டிய சம்பவத்தில் மூன்று பேர் கைது
Updated on
1 min read

நெல்லை: நெல்லை அருகே சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக தாக்கிய வழக்கில் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி அருகே மேலப்பாட்டத்தில் நேற்று (நவ.4) ஒரு கும்பல் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலப்பாட்டம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த அச்சிறுவன் நேற்று இரவில் வீட்டில் இருந்தபோது வீட்டுக்குள் திடீரென்று புகுந்த அந்த கும்பல் சிறுவனின் காலில் அரிவாளால் வெட்டிவிட்டு, பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கிவிட்டு தப்பி ஒடினர்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அச்சிறுவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறை சிறுவனை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற கும்பலை தேடி வந்தனர்.

இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தன் மீது மோதும் நோக்கில் வேகமாக காரில் சென்றவர்களை கேள்வி கேட்டதற்காக, சிறுவனை வீடு புகுந்து அரிவாள் மட்டும் பீர் பாட்டிலால் கொடூரமாக தாக்கிய அந்த கும்பல், திருமலை கொழுந்துபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து திருமலை கொழுந்துபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், லட்சுமணன் ,தங்க இசக்கி ஆகிய மூன்று பேரை பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினர் இன்று (நவ.5) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, வீடு புகுந்த சிறுவனை தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து மேலப்பாட்டத்தில் சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in