“விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா?” - உதயநிதிக்கு தமிழிசை கேள்வி

“விஜய்யை கோபப்படுத்த அஜித்துக்கு வாழ்த்தா?” - உதயநிதிக்கு தமிழிசை கேள்வி
Updated on
1 min read

சென்னை: “தவெக தலைவர் விஜய்யை கோபப்படுத்த நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து கூறுகிறாரா?” என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “முத்துராமலிங்க தேவர் மகிழ்ச்சியடையும் வகையில் திட்டங்களைக் கொண்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆன்மிகவும் தேசியமும் இரு கண்கள் என முத்துராமலிங்க தேவர் கூறினார். ஆனால், ஆன்மிகமும், அரசியலும் கலக்க முடியாது என துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார். தேசியத்தையும் ஆன்மிகத்தையும் ஒரு சேர கொண்டு சென்றதால் தான் முத்துராமலிங்கனாருக்கு வெற்றி கிடைத்து. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும். ஆன்மிகமும், அரசியலும் இணைந்தே தான் இருக்கும்.

நடிகர் அஜித்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து கூறியுள்ளார். தவெக தலைவர் விஜய்க்கு கோபம் வரும் என்பதால் அவர் அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறாரா என தெரியவில்லை. உலக அரங்கில் விளையாட்டை முன்னிறுத்துவதற்கு அஜித்துக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, சாமானிய மக்கள் பயன்பெறும் விளையாட்டு திடல்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பதற்கு வன்மையான கண்டனங்கள். இதேபோல், அம்மா அரங்கம், சர்பிட்டி தியாகராயர் அரங்கமும் தனியார் வசம் கொடுக்கப்படுகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் வாடகையை குறைத்து, அரங்கங்களை அரசு நடத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

அஜித்துக்கு உதயநிதி அழைப்பு: முன்னதாக. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைதளப் பதிவில், “உலக அளவில் சிறப்புக்குரிய 24 ஹெச் துபாய் 2025 மற்றும் தி யூரோப்பியன் 24 ஹெச் சீரிஸ் சாம்பியன்ஷிப் - போர்ஷே 992 ஜிடி 3 கப் கிளாஸ் கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமாருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

நம்முடைய தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை ‘அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித்குமாருக்கு தமிழக விளையாட்டு மேப்பாட்டுத்துறை சார்பாக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், இரவு நேர சாலை பார்முலா 4 கார் பந்தயம் போன்ற முன்னெடுப்புகளை வாழ்த்திய அஜித்குமாருக்கு எங்கள் அன்பும், நன்றியும். விளையாட்டுத் துறையில் தமிழகத்தை உலக அரங்கில் உயர்த்திட ஒன்றிணைந்து செயல்படுவோம். கார்பந்தய போட்டியில் வென்று தமிழகத்துக்கு நீங்கள் பெருமை சேர்த்திட வாழ்த்துகள்” என்று தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in