வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற டிச.15-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விரும்புவோர் டிச.15-ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை இன்று (அக்.24) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வீர, தீரச் செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஆண்டுதோறும் முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், சீருடை பணியாளர்கள் உட்பட அரசு ஊழியர்களில் மூவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்படும்.

பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் அடுத்தாண்டு குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும்.வரும் ஆண்டுக்கான, 'வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்' விருதுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வீர தீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் , பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட ‘https://awards.tn.gov.in’என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். வீர தீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீர தீரச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்விருதுக்கு வரும் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in