

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் இன்று (அக்.23) காலை 8 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை (32 மணி நேரம்) மண்டலம் 4, 5, 6, 8, 9–க்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதானகுழாய் இணைக்கும் பணிகள் இன்று நடைபெறவுள்ளதால் 32 மணி நேரத்துக்கு தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் (பகுதி),பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும்.