

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புட்லூரில் மழைக்கு முளைத்த காளானை சமைத்துச் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே புட்லூர் கோ-ஆப்டெக்ஸ் நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (46). கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் இவர், தனது வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் முளைத்திருந்த காளானை, நேற்று பறித்து சமைத்து, உணவு தயாரித்தார்.
அந்த உணவை லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சாந்தி (45), அலமேலு (31), வெங்கடேஷ் ( 23), சரண்யா (14) ஆகிய 5 பேர் சாப்பிட்டதாக தெரிகிறது. காளானை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 5 பேருக்கும் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வீட்டின் அருகில் உள்ள சாலையில் 5 பேரும் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் 5 பேரையும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற 5 பேரும், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.