காவலரின் மரணம் குறித்து விசாரணை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன்(29). இவர் சென்னை புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றிவந்த நிலையில், கடந்த 18-ம் தேதி காவலர் குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பிவிட்டதா? என்பதைப் பார்ப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது 14-வது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழந்தார். அவர் கால் தவறி விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் அவரது மரணம் மர்மமான முறையில் ஏற்பட்டதாகவும், அதுகுறித்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் செல்வ முருகன், மர்மமான முறையில் 14-வது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் உண்மை நிலையைக் கண்டறிந்து. மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கி அவரின் குடும்பத்தை அரசு காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
