மாநாட்டு குழுவினர், தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களுக்கு அக்.18-ல் அரசியல் பயிலரங்கம் - தவெக அறிவிப்பு

மாநாட்டு குழுவினர், தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களுக்கு அக்.18-ல் அரசியல் பயிலரங்கம் - தவெக அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: தவெக முதல் மாநில மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு வரும் அக்.18ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது கட்சித் தலைவரின் அறிவுறுத்தல்படி, நமது முதல் மாநில மாநாடான வெற்றி கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில் அக்.18ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு, இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை, கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை, சமூகப் பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது, வெற்றிக் கொள்கைத் திருவிழா-விளக்கவுரை மற்றும் மாநாட்டுக் குழுக்கள் கலந்தாய்வு எனும் தலைப்புகளில் கருத்துரை வழங்கவுள்ளனர்.

எனவே, இந்த கலந்தாய்வில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழக, புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in