பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாயம்: கொடிவேரி அணையில் குளிக்க தடை 

பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாயம்: கொடிவேரி அணையில் குளிக்க தடை 
Updated on
1 min read

ஈரோடு: பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், கொடிவேரி அணையில் குளிப்பதற்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரி அணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர், பவானி ஆற்றின் மூலம் கொடிவேரி தடுப்பணைக்கு வருகிறது. கொடிவேரி பாசனத்துக்கு நீர் வழங்கும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து வழிந்தோடும் நீரானது அருவி போல கொட்டுவதால், இதில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம்.

இந்நிலையில், பருவமழை தொடங்கியுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொடிவேரி அணையில் குளிப்பதற்கு, இன்றும் நாளையும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், இன்று காலை முதல் கொடிவேரி அணைக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது. அணையின் இருபுறமும் பங்களாபுதூர் மற்றும் கடத்தூர் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் மூலம், கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in