மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மேம்பால பணி முடிந்த பகுதிகளில் விரைவில் ரயில் பாதை அமைப்பு: மெட்ரோ அதிகாரிகள்

மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மேம்பால பணி முடிந்த பகுதிகளில் விரைவில் ரயில் பாதை அமைப்பு: மெட்ரோ அதிகாரிகள்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால் ரெட்டேரி உள்ளிட்ட சில பகுதிகளில் ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடமாகும். இந்த வழித்தடத்தில் ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக அமைகிறது.

இந்த தடத்தில், பெரும்பாலும் மேம்பால பாதை வழியாக அமைவதால், பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாதவரம் - சோழிங்கநல்லுார் வழித்தடத்தில் 44.6 கி.மீ., தூரத்தில் பெரும்பாலான மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைகிறது. இந்த பணிகள் தாமதம் இன்றி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

மாதவரம்– சோழிங்கநல்லுார் வழித்தடத்தில் மொத்தமாக இதுவரையில் 40 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இருப்பினும், கோயம்பேடு – நந்தம்பாக்கம் இடையே 50 சதவீதத்துக்கும் மேலான பணிகள் முடிந்துள்ளன. இத்தடத்தில் 2026-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். பட் ரோடு உள்ளிட்ட சிலபகுதிகளில் தற்போது தான் பணிகள் தொடங்கி உள்ளன. இத்தடத்தில் அனைத்து பணிகளும் 2027-ம்ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in