கோவை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று (செப்.29) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அக்.5-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

இன்று (செப்.29) ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (செப்.30) நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிபட்சமாக திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 11 செமீ, ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களில் தலா 9 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, நீலகிரி மாவட்டம் கோடநாடு ஆகிய இடங்களில் தலா 8 செமீ, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஆகிய இடங்களில் தலா 7 செமீ, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உப்பாறு அணை, ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம், தேனி மாவட்டம் மஞ்சளாறு, மதுரை மாவட்டம் எழுமலை, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட் ஆகிய இடங்களில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in