காலாண்டு விடுமுறையால் குமரியில் சூரிய உதயம் காண பெற்றோருடன் குவிந்த குழந்தைகள்
நாகர்கோவில்: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு்ளளதை தொடர்ந்து கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் பெற்றோர்களுடன் பள்ளிக் குழந்தைகள் அதிகமானோர் குவிந்தனர். அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வாரவிடுமுறை இறுதி நாட்கள், பண்டிகை நாட்கள், கோடை விடுமுறை, மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுவர். தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து வருகிற அக்டோபர் 7-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஏராளமானோர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். குறிப்பாக சுற்றுலா திட்டங்களை வகுத்து நேற்று இருந்தே சுற்றுலா பயணிகள் பள்ளி குழந்தைகளுடன் அதிகமானோர் கன்னியாகுமரியில் குவிந்தனர். இதனால் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன. அறை கிடைக்காதவர்கள் நாகர்கோவில், மார்த்தாண்டம், மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் அழை எடுத்து தங்கினர்.
சுற்றுலா பயணிகள் அதிகமானோர் குவிந்ததால் குமரி மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இன்று கன்னியாகுமரியில் அதிகமானோர் வந்திருந்தனர். அதிகாலையில் முக்கடல் சங்கம பகுதியில் சூரிய உதயத்தை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். குழந்தைகள் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையுடன் கூடிய பின்னணியில் சூரிய உதயத்தை கண்டு செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர்.
இதைப்போன்று திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, சிதறால் மலைக்கோயில் உட்பட குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் அனைத்திலும் நேற்று கூட்டம் அலைமோதியது. பள்ளி காலாண்டு விடுமுறை முடிவது வரை குமரி சுற்றுலா மையங்களில் கூட்டம் இருக்கும் என சுற்றுலா துறையினர் தெரிவித்தனர்.
