சிறுமி கொலை வழக்கு கைதி தற்கொலை: ஜிப்மரில் நடந்த பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோவில் பதிவு

சிறுமி கொலை வழக்கு கைதி தற்கொலை: ஜிப்மரில் நடந்த பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோவில் பதிவு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கைதிகளில் ஒருவர் நேற்று சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடல் இன்று காலை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

புதுவை முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சிறுமி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த விவேகானந்தன், கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணைகள் முடிவுற்றுள்ள நிலையில் சிறையில் இருந்த விவேகானந்தன் நேற்று சிறை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட விவேகானந்தனின் உடல், பிம்ஸ் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு இன்று காலை புதுச்சேரி ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் ரமேஷ் முன்னிலையில் விவேகானந்தனின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை நண்பகலில் முடிவடைந்தது. சட்ட ரீதியிலான அடுத்தக்கட்ட பணிகள் முடிவுற்றதும் உடலை விவேகானந்தனின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in