சென்னை | ரூ.5 கோடியில் அம்மா உணவகங்களை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை | ரூ.5 கோடியில் அம்மா உணவகங்களை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் 388 அம்மாஉணவகங்களை ரூ.5 கோடியே 61 லட்சத்தில் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2013 முதல் 2016 காலகட்டத்தில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. தற்போது 388 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் இது நாள்வரை குறிப்பிடும்படியாக பராமரிப்பு செய்யாமல் பாழடைந்து கிடந்தது. பல கட்டிடங்களின் உள் பகுதியில் சமையல் செய்யும்போது வெளியேறும் ஆவி, எண்ணெய் படிந்து சுவர்கள் அசுத்தமாக உள்ளன.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு, அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டிடங்களில் உள்ள விரிசல்களை சரி செய்வது, சுவர்களுக்கு வண்ணம் பூசுவது, முறையான கழிவுநீர் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மேலும் கடந்த 2013-ம் ஆண்டு வாங்கப்பட்ட குளிர் சாதன பெட்டி, கிரைண்டர், மிக்சி போன்றவை பழுதாகி கிடக்கும் நிலையில் அவற்றுக்கு பதிலாக புதிதாக வாங்கி கொடுக்கவும் திடடமிட்டுள்ளது.

அம்மா உணவகங்கள் சீரமைப்பு பணிகளுக்காக மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடியே 61 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான டெண்டரும் கோரப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in