மதுரை | சுகாதார ஆய்வாளர் மீது தூய்மைப் பணியாளர் புகார்: காவல்துறைக்கு கோர்ட் உத்தரவு

மதுரை | சுகாதார ஆய்வாளர் மீது தூய்மைப் பணியாளர் புகார்: காவல்துறைக்கு கோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி தூய்மைப் பணியாளர் அளித்துள்ள புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் உதவி ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நான் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர். மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளேன். என்னுடன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். சுகாதார ஆய்வாளராக ரமேஷ் என்பவரின் கீழ் நாங்கள் பணியாற்றுகிறோம். அவர் உயர் சாதியைச் சேர்ந்தவர். இதனால் என்னையும், என்னை போன்ற தூய்மைப் பணியாளர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சாதியைச் சொல்லி திட்டுவதும், பெண்கள் மீதான வன்கொடுமை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து அவர் மீது மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம். சுகாதார ஆய்வாளரின் நடவடிக்கை, வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைச் சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, “மதுரை திடீர் நகர் போலீஸ் உதவி ஆணையர், இருதரப்பினரையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in