திண்டுக்கல்: மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் கொடுத்த தலைமைக் காவலர்

சிறுவன் கிஷோர்
சிறுவன் கிஷோர்
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மூளைச்சாவு அடைந்த தனது மகனின் உடல் உறுப்புகளை, தலைமைக் காவலர் தானமாக தந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் பழனிச்சாமி. இவரது மகன் கிஷோர் (11). இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக கிஷோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் சிறுவன் கிஷோர் மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து, சிறுவன் கிஷோரின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. சிறுவன் கிஷோரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை அடுத்து அவரது உடலுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அரசு மரியாதை செலுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in