

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் 45 நாள் மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல், மே மாதங்களை மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய வேளாண் அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதிகளில் இந்த ஆண்டுக்கான 45 நாள் மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி அமலுக்கு வருகிறது. மே 29 வரை இந்த தடை அமலில் இருக்கும்.
இதனால் தமிழகம் முழுவதும், 13 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் ஓய்வெடுக்கும். தூத்துக்குடியில் மட்டும் 268 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீ்ன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த 45 நாட்களையும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கப் பயன்படுத்திக் கொள்வர்.