1,265 பேருந்து நிழற்குடைகளில் தீவிர தூய்மைப்பணி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

1,265 பேருந்து நிழற்குடைகளில் தீவிர தூய்மைப்பணி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Published on

சென்னை: சென்னை மாநகராட்சியில் 418 கிமீ நீளத்துக்கு 488 பேருந்து தட சாலைகள் உள்ளன. இவற்றில் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி செல்வதற்கும் ஏற்ப, ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவின்படி, கடந்த ஜூலை 22-ம் தேதி முதல்மாநகராட்சி சார்பில் தீவிர தூய்மைபணி மேற்கொள்ளப்பட்டது.

பிரதான சாலைகளில் தூய்மை பணி நிறைவுற்ற நிலையில் தற்போது உட்புற சாலைகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் சாலையோரம் நீண்ட நாட்களாக கொட்டப்பட்டு கிடக்கும் குப்பை, கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. இதோடு சேர்த்து, முதற்கட்டமாக 1,315 வாகனங்கள் சாலையோரங்களில் கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டு, அவை அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணிகளைசெப்டம்பருக்குள் முடிக்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

மாநகரப் பகுதியில் பெரும்பாலான பேருந்து நிறுத்த நிழற்குடை பகுதிகள் அசுத்தமாக காணப்படுகின்றன. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்துபுகார்கள் சென்ற நிலையில், ஆணையர் குமரகுருபரன் உத்தரவின்படி, நேற்று காலை மாநகராட்சி பேருந்து நிறுத்த நிழற்குடைகளை தூய்மைப்படுத்தும் பணிகள்மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “மாநகரம் முழுவதும் 1,265 இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. 95.70 டன் குப்பை,கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டன. 4 ஆயிரத்து 221 சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட 47 விளம்பரப் பதாகைகளும் அகற்றப்பட்டன” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in