பணப்பலன்களை பெற நிபந்தனை: போக்குவரத்து கழக ஓய்வூதியர் புகார்

பணப்பலன்களை பெற நிபந்தனை: போக்குவரத்து கழக ஓய்வூதியர் புகார்
Updated on
1 min read

சென்னை: ஓய்வூதிய பணப்பலன் பெறுவதற்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ஓய்வு பெறுவோரை நிர்வாகம் நிர்ப்பந்திக்கக் கூடாது என்று அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன், போக்குவரத்துத் துறை செயலர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்குப் பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் இத்திட்டத்தின்கீழ் பணிக்கொடை மற்றும் இதர ஓய்வு காலப்பலன்கள் பெற வேண்டுமானால், ஓய்வூதியம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரமாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இப்பிரச்சினையையொட்டி, ஏற்கெனவே கடந்த ஆண்டும் அரசு கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் அனுப்பப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக சிஐடியு தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தீர்ப்புக்கு முரணாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, ஓய்வுபெற்ற தொழிலாளர்களிடம் நீதிக்கு புறம்பான முறையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நிர்ப்பந்திப்பதை கைவிட்டு சட்டப்படி கிடைக்க வேண்டிய பணப்பலன்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in