பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம்: மின்வாரிய தலைவர் எச்சரிக்கை

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம்: மின்வாரிய தலைவர் எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: மின்விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பணிநீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு வழங்கப்படும் என மின்வாரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: “மின்விபத்துக்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் எனவும், இதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தும் புகைப்படத்தை பணிக்கு முன்னதாக டிஎன்இபி பாதுகாப்பு செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும் விபத்துகள் தொடர்கின்றன. இது தொடர்பான மாதாந்திர ஆய்வில், விபத்து நேரிட்ட பகுதிகளில் புகைப்படங்களை செயலியில் பதிவு செய்யவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, செயலியில் புகைப்படத்தை பதிவு செய்யாத நேர்வில் உயிரிழப்புகள் ஏற்படும் பட்சத்தில் கண்காணிப்பாளருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். குறிப்பாக கட்டாய ஓய்வு, இடைநீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனைக்கு சம்பந்தப்பட்டவர் ஆளாக்கப்படுவார். உயிர் என்பது மிக முக்கியமான ஒன்று. எனவே, பாதுகாப்பில் கவனம் செலுத்தி வழிகாட்டுதல்களை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்,” என்று அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in