‘கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கலாம்’ - கரையோர மக்களுக்கு திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நாளை (ஆக.14) தண்ணீர் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: "காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக, முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை (ஆக.14) காலை 6 மணி முதல் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. காவிரியில் வரும் தண்ணீர் வரத்தைப் பொறுத்து கொள்ளிடத்தில் தண்ணீரின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ, கொள்ளிடம் ஆற்றின் வழியாக கால்நடைகளை ஓட்டிச் செல்லவோ வேண்டாம்" என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in