கோப்புப்படம்
கோப்புப்படம்

ஈஷா சார்பில் தமிழகம் முழுவதும் 24 இடங்களில் இலவச யோகா வகுப்பு

Published on

கோவை: கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக வரும் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இவ்வகுப்புகள் தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது.

இப்பயிற்சி மக்களின் உள்நிலை நல்வாழ்விற்காக, தொன்மையான யோக அறிவியலின் அடிப்படைகளில் இருந்து ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த குறிப்பிட்ட ஈஷா யோகா பயிற்சி மூலம் பல்வேறு உடல் மற்றும் மன நலன்களை பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் 24 இடங்களில் நடைபெற இருக்கும் இவ்வகுப்புகள் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் என ஒரு நாளின் இரு வேளைகளில் நடைபெற உள்ளது. இதில் 15 வயது தொடங்கி 25 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்க முடியும்.

உள்நிலையில் தெளிவு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவித்து, இளைஞர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி இலக்குகளை அடைந்திட இந்த யோகப் பயிற்சி அற்புத வாய்ப்பாக அமையும். இந்த வகுப்பில் இலவசமாக பங்கேற்க விரும்பும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் isha.co/youth-iyp என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in