வயநாடு நிலச்சரிவு: விசிக ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவு: விசிக ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக விசிக சார்பில் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கேரள மாநிலத்தில் நடந்துள்ள நிலச்சரிவுப் பேரிடரால் 200-க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையும் பெருந்துயர் நடந்துள்ளது. குடும்பம் குடும்பமாகப் பலியாகியுள்ளனர். புதையுண்டு பலியானோரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன. எனினும், பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

இப்பேரிடரை ‘தேசியப் பேரிடராக’ அறிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதன்படி பாதிக்கப்பட்ட பகுதியில் எஞ்சியுள்ளோரின் 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானம்' ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இப்பேரிடரை எதிர்கொள்ளும் கேரள மாநில அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in