வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல்
Updated on
1 min read

புதுச்சேரி: வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன் 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 5-வது கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று காலை சட்டப்பேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசித்து சபையைத் தொடங்கினார். தொடக்கத்தில் புதுச்சேரி பாஜகவின் முதல் எம்எல்ஏ-வான கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வான அன்பழகன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கேரளத்தில் வயநாட்டில் நிலசரிவில் சிக்கி உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பின்னர், வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அம்மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ கேஎஸ்பி ரமேஷ் தனது ஒரு மாத சம்பளத்தை (ரூ.48,500) கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேபோல் முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக மாநில துணைச் செயலருமான வையாபுரி மணிகண்டன் ரூ.25 ஆயிரம் அனுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், புதுச்சேரி அரசு சார்பில் கேரளத்துக்கு நிவாரண உதவி தரவேண்டும். புதுச்சேரி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் இத்துயரத்தில் பங்கேற்று உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in