

சென்னை: தமிழக பாஜக செயலாளராக பதவி வகிக்கும் அஸ்வத்தாமன் கடந்த ஜூலை 7 அன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற, தமிழக சிவசேனா முன்னாள் தலைவர் தங்கமுத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் அம்மாளின் நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அஸ்வத்தாமன் மீது நாகூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி அஸ்வத்தாமன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், ‘பாஜக மாநில செயலாளரான அஸ்வத்தாமன் தொடர்ந்து இதுபோல வெறுப்பு பேச்சுகளை பேசி வருகிறார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் வேண்டும்’ எனக்கோரப்பட்டது.
அதையடுத்து, விசாரணையை ஆக.1-க்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை அஸ்வத்தாமனை கைது செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.