பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006 - 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64,644 லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40,600 இழப்பு ஏற்பட்டதாகவும் பொன்முடி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் உட்பட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத் துறைக்கு வந்த தகவலின் அடிப்படையில், கடந்த ஆண்டு சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட அமைச்சர் பொன்முடி தொடர்புடைய 7 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், கணக்கில் வராத பணம், வெளிநாட்டு கரன்சிகள் உட்பட பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியின் ரூ.42 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. தொடர்ந்து, அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தியது.

இதற்கிடையே, சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இதையடுத்து, சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனான முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி ஆகியோரின் ரூ.14.21 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை நேற்று முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in