சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகல்

சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகல்
Updated on
1 min read

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி எம்எஸ் ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வாதங்களின்போது, “உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரின் தாய் தரப்பு தாக்கல் செய்த மனுவில், ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் உயர் நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க விரும்பவில்லை. இந்த வழக்கை நாங்கள் விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வழக்கின் விசாரணையில் இருந்து விலகுகிறோம். இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்.” என்று கூறி விலகினர்.

தொடர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதி எந்த அமர்வுக்கு இந்த வழக்கை ஒதுக்கீடு செய்கிறாரோ அந்த அமர்வு இனி விசாரிக்கும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in