கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பகலில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்: ரயில்வே கோட்டம் அறிவிப்பு

கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பகலில் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும்: ரயில்வே கோட்டம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை- தாம்பரம் - செங்கல்பட்டு வழித் தடத்தில் பகல் நேரத்தில் மின்சார ரயில் சேவை வழக்கம்போல இயக்கப்படும். இரவு நேரத்தில் மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று (23-ம்தேதி) முதல் ஆக.14 வரைதினசரி 55 ரயில்கள் ரத்து செய்யப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முதல் வரும் ஆக. 2-ம் தேதி வரை பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். அதே சமயம், இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2.30மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது.

அதற்கு மாறாக சிறப்பு பயணிகள் ரயில்கள் மட்டுமே இயக்கப்படும். மேலும், வரும் சனி (27-ம் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28-ம் தேதி) அன்று புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது.

ஆக. 3 முதல் ஆக. 14-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்ததுபோலவே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in