கோப்புப்படம்
கோப்புப்படம்

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

Published on

சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நேற்று நிலவியது. இதற்கிடையே, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஜூலை 19-ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீவேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்,திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, நாளை(ஜூலை 18) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல், தெற்கு, மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்,கர்நாடக கடலோர பகுதிகள், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிமீவேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in