மதுரையில் நாம் தமிழர் கட்சி தொகுதி துணைச் செயலாளர் வெட்டிப் படுகொலை

மதுரையில் நாம் தமிழர் கட்சி தொகுதி துணைச் செயலாளர் வெட்டிப் படுகொலை
Updated on
1 min read

மதுரை: மதுரையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில், மதுரை வடக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியனை கும்பல் ஒன்று ஓட ஓட துரத்தி வெட்டிக் கொலை செய்தது.

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணை செயலாளராக இருந்தார். இன்று (ஜூலை 16) காலை இவர் தல்லாகுளம் பகுதியில் உள்ள வல்லபாய் ரோட்டில் சென்றபோது கும்பல் ஒன்று வழிமறித்து அவரிடம் தகராறு செய்து சரமாரியாக வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து தம்பித்து ஓடிய அவரை விடாமல் துரத்திய அந்தக் கும்பல், ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தல்லாகுளம் போலீஸார், பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், பாலசுப்பிரமணியனுக்கும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள் மதுரையில் மற்றொரு அரசியல் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in